அபிஷேகம் (அருட்பொழிவு) செய்யப்பட்ட கரங்களே நற்கருணை ஆண்டவரைத் தொட வேண்டும்! திவ்ய திருப்பலியின் போது ஒவ்வொரு குருவும் நம் ஆண்டவராகிய இயேசுவாக மாறுகிறார்கள். அதனால் குருக்களுக்கு மட்டுமே ஆண்டவரை கரங்களால் தொட தகுதி உண்டு!
ஆண்டவராகிய இயேசு பலியாகி, தன்னையே பிதாவுக்கு ஒப்புக்கொடுத்து, தானும் அதில் பிரவேசித்து, தானே உணவாக அதாவது கடவுளே உணவாக வருகிறார்!
குருவானவர் ஒரு குழந்தைக்கு தாய் உணவு ஊட்டுவதைப்போல ஆண்டவரை நமக்கு ஊட்டுகிறார்!
இந்த கரங்களில் நற்கருணை வாங்கும் பழக்கம் எங்கிருந்து வந்தது?? அப்படி வாங்கும் பலர் இடக்கையில் வாங்கினால் என்ன தவறு என்று கேட்கிறார்கள்!
அப்படி கேட்பவர்கள் இட்லி, தோசை பிரியாணியை இடது கையில் சாப்பிடுங்கள்!
உங்கள் ஊருக்கு ஆயர் வந்தாரென்றால் அவருக்கு காணிக்கைகளையோ, அன்பளிப்பையோ இடது கையால் கொடுங்கள்!
திருமணப்பத்திரிக்கை யாரும் கொடுத்தால் இடது கையால் வாங்குங்கள்!
அரசாங்க அலுவலகத்துக்கு சென்றாலோ, அல்லது கலெக்டரிடமோ மனு கொடுக்கும்போது இடது கையால் கொடுங்கள்!
காலைக்கடன்களை முடித்துவிட்டு வலது கையால் கழுவுங்கள்!
கேட்கவே அசிங்கமாக இருக்கிறதா ??? இல்லையா???
ஒருசில அவசங்கைகளை இப்படித்தான் முகத்தாட்சண்யம் பார்க்காமல் கேட்கவேண்டியிருக்கிறது! நமது ஆண்டவர் முகத்தாட்சண்யம் பார்ப்பவர் கிடையாது!
சமீபத்தில் புனிதையான அன்னை தெரசா, “கத்தோலிக்கர்கள் ஆண்டவரை கரங்களில் வாங்குவது வருத்தம் அளிக்கிறது” என்று சொல்லியுள்ளார்கள். மேலும் அவர் ஒரு போதும் கரங்களில் வாங்கியதே இல்லை. போப் ஆண்டவர் பெனடிக்ட் மற்றும் முன்னாள் போப் புனித இரண்டாம் ஜான்பால் ஆண்டவரை கரங்களில் வாங்கியது இல்லை!
இவர்களுக்கெல்லாம் தெரியாதது ஆண்டவரை கரங்களில் வாங்குபவர்களுக்கு தெரிந்து விட்டதா?
கத்தோலிக்க மக்கள் யாரும் ஆண்டவரை தாங்களாகவே கரங்களில் வாங்குவது இல்லை! காலம் காலமாக நாவில் வாங்கியவர்கள் தானே! சில இடங்களில் வலுக்கட்டாயமாக கரங்களில் வாங்க வைக்கப்படுகிறார்கள். அதுதான் உண்மை! அப்படி விசுவாசிகளுக்கு இடறலாய் இருப்பவர்களே! உங்களுக்கு ஐயோ கேடு!
தென்புறத்தில் ஒரு ஆலயத்தில் ஒரு அருட்சகோதரி உட்கார்ந்திருக்கும் மக்களை தானே தேடிச்சென்று கரங்களில் ஆண்டவரைக் கொடுக்கிறார். ஏன் அவர்கள் எழுந்து நடந்து வர மாட்டார்களா? என்ன? முடியாதவர்களுக்கு கொடுக்கலாம். சில இடங்களில் நற்கருணை ஆண்டவரை வேறொருவரிடம் கொடுத்து அனுப்புவது நடக்கிறது. அதாவது Pass செய்தல்! எங்கே சென்று கொண்டிருக்கிறது நம் கத்தோலிக்கம்???
நற்கருணை நாதருக்கு நடக்கும் அவசங்கைகள் நாளுக்கு நாள் பெருகி வருகிறது! அது உடனே நிறுத்தப்படாவிட்டால் இன்னும் அதிகமான அழிவுகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும்!
மோயிசனை முட்செடி அருகில் வர செருப்பைக்கூட கழற்றி வைக்கசொல்லிய கடவுளை சர்வ சாதாரணமாக செருப்பைப் போட்டுக்கொண்டு, கண்ணியமில்லாத ஆடைகளை அணிந்து கொண்டு (சில பெண்கள்) அவரை கரங்களில் வாங்குவதும், அதுவும் இடக்கையில் வாங்குவதும் அதிகரித்து வருகிறது. இப்போது இளைஞர்கள் (சிலர்) கழுத்தில்லாத பனியன்கள், பனியனில் யார் யார் உருவமெல்லாமோ பதிக்கப்பட்டு இருப்பதை அணிந்து கொண்டு, ரொம்பவே அநாகரீகமான ஆடைகள் அணிந்து திருப்பலிக்கு செல்வதும் அதிகமாகிறது.
பிற மத சகோதரர்கள் தீர்த்தத்தை உயிரே போனாலும் இடது கையில் வாங்கமாட்டார்கள். ஆனால் மூவொரு கடவுளை, பரிசுத்தரின் பரிசுத்தரை இடக்கையில் வாங்கிவிட்டு அதில் என்ன தப்பு என்று பலர் கேட்கிறார்கள்!
யார் யாரெல்லாம் மனுமகனைக் குறித்து இடறல்படுகிறார்களோ அவர்களைக் குறித்து அவரும் இடறல்படுவேன் என்று சொல்லியிருக்கிறார்.
நாளை அவரை சந்திக்கவும், அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவும் தயாராகுங்கள்!
ஆண்டவரை நாவில் வாங்குவோரும் நல்ல பாவசங்ககீர்த்தனம் செய்து தகுதியான உள்ளத்தோடுதான் அவரை வாங்க வேண்டும். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
நற்கருணை நாதர் பூலோகத்தில் நமக்கு கிடைக்கும் மோட்சம்! அவரை பயன்படுத்த தெரியாதவர்கள் சாகவே சாவார்கள்.
நம் ஆண்டவரை முழங்காலில் இருந்து தகுந்த தயாரிப்போடு பக்தியோடு நாவில் வாங்க வேண்டும். நூறு பேர் வாங்கும் இடத்தில் பத்துபேர் ஆண்டவரை முழங்காலில் நின்று வாங்கினால் மீதி உள்ள 90 பேரும் சிறிது காலத்தில் முழங்காலில் இருந்து ஆண்டவரை வாங்க ஆரம்பித்து விடுவார்கள்!
மாற்றம் நம்மிடம் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்!
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !